போலி காளான் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் பேல் பூரி, பானி பூரி விற்கும் வடநாட்டு தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் 10 ரூபாய் என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. பெரும்பாலான கடைகளில் "காளான்' என்ற பெயரில் விற்கப்படும் "அயிட்டம்' காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதா மாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக் கொள்கின்றனர். பின்னர், சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபி பவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதா மாவு கலவை "வடை'களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.
இதையறியாத பலரும் "காளான்' சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் "அயிட்டத்தை' விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதா மாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, ,உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் மருத்துவத்துறையினர். மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுத்தன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், தள்ளுவண்டிக்காரர்களின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
மாரடைப்பு ஆபத்து: கோவை அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறியதாவது: சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய "காளான்' "பானி பூரி' "பேல் பூரி' தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்படும். இல்லாடிவில் அல்சர், அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மசாலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, "கேன்சர்' பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, "ஹைட்ரோ கார்பன்' அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு, டாக்டர் தெரிவித்தார்.
http://suvaiinbam.blogspot.in/2013/02/blog-post.html
ReplyDelete